அசைவ சமையல்



மீன் குழம்பு


தேவையான பொருட்கள்

மீன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 4
பூண்டு - 20 பல்
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகுதூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் - 1/2 மூடி
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1.
மீனை செதில் நீக்கி, சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டி, உப்பு போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.

2.
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

4.
அடுத்து நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

5.
பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

6.
அடுத்து மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

7.
இதனுடன் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

8.
தேங்காயைத் துருவி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

9.
புளி நன்றாக கொதித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

10.
குழம்பு மிகவும் தண்ணியாகவோ, கெட்டியாகவோ இல்லாமல் நடுநிலையாக இருக்கும்போது மீனைப்போடவும்.

11.
மீனைப்போட்டு ஐந்து நிமிடங்கள் மட்டும் கொதிக்கவிடவும். அதிக நேரம் கொதிக்கவிட்டால் மீன் துண்டுகள் உதிர்ந்துவிடும்.

12.
அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும் போது மிளகுத்தூளைச் சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
குறிப்பு

1.
நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவை அதிகமாக இருக்கும்.

2.
மீன் வாசனை அதிகம் வராமல் இருக்க, தேங்காய் துருவல் அறைக்கும் போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேர்த்து அரைக்கவும்.



நெத்திலி தொக்கு


தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப் பால் - அரை கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1.
முதலில் நெத்திலி மீனை நெத்திலியை முள்ளெடுத்து, உப்பு போட்டு நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து வைக்கவும்.

2.
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டை தட்டி போடவும்.

4.
பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

5.
இதனுடன் எல்லா மசாலா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.

6.
புளியை கட்டியாக கரைத்து ஊற்றி பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

7.
இப்போது வடித்து வைத்திருக்கும் நெத்திலி, தேங்காய்ப் பாலை சேர்த்து மீண்டும் குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும்.

8.
உப்பு அளவு பார்த்து தேவைக்கு சேர்த்து கொள்ளவும்.

9.
நெத்திலி கொதித்து கெட்டியானதும், கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு
1.
நெத்திலியை கழுவும் போது தலை பகுதியை பிடித்து கொண்டு விரலால் நடுவில் கீறினால் முள்ளை அப்படியே எடுத்து விடலாம். சாப்பிடும் போது ஒரு முள் கூட இருக்காது.

2.
நெத்திலியை கழுவும் போது ஒரு பெரிய கண் வடிசட்டியில் (புளி வடிகட்டி போல்) வைத்து கழுவினால் கீழே விழாது. லேசாக ஜலிப்பது போல கழுவ வேண்டும்.

3.
நெத்திலி மீன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் போட வேண்டும்.

4.
காரசாரமாக சாப்பிடுபவர்கள் இன்னும் அரை தேக்கரண்டி மிள்காய் தூளும், ஒரு பச்சை மிளகாயும் கூட சேர்த்து கொள்ளலாம்.

5.
காஷ்மீரி சில்லி பொடி சேர்த்தால் நல்ல கலராக இருக்கும்.
சுறா மீன் புட்டு


தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/4 கிலோ
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேஜைக் கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கோப்பை
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1.
சுறா மீனை வேக வைத்து எடுத்து, மீன்களை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

2.
அதில் சிறிது உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும்.

3.
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

5.
பிறகு தக்காளி, மிளகாய்த் தூளை சேர்த்து வதக்கவும்.

6.
இப்போது உதிர்த்து வைத்துள்ள மீனையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் வேகவிட வேண்டும்.

7.
கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
குறிப்பு

1.
சுறா மீன் வாங்கியதும் அதில் அரை கிலோ எடுத்து அதில் உப்பு, இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள் எல்லாம் சிறிது சேர்த்து இரண்டு குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேக வைத்து முள்ளுடன் உள்ள மீனை குழம்பிற்கும் (சால்னா) முள்ளில்லாதவைகளை பிரித்தெடுத்து கட்லெட் (அ) புட்டு செய்ய எடுத்து கொள்ள வேண்டும்.

2.
குழம்பு செய்யும் போது மிளகு சேர்த்து செய்ய வேண்டும், புளி சேர்க்க கூடாது. இது பிள்ளை பெற்றவர்களுக்கு மிகவும் நல்லது.

இறால் கிரேவி

தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
பட்டை - 2 (1/2 இஞ்ச் அளவு)
கிராம்பு - 5
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1.
இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து, நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

2.
சாம்பார் வெங்காயத்தில் பாதியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீதியை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.

3.
தக்களியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டு போட்டு சிவக்க வதக்கவும்.

5.
பிறகு இஞ்சி பூண்டு விழுது, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6.
அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கியதும், இறாலைப் போட்டு நன்றாகப் பிரட்டவும்.

7.
இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக வேக விடவும்.

8.
இறால் வெந்து கிரேவி நன்றாக சுண்டி எண்ணெய் மேலே வரும் போது, மிளகு தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு

1.
இறாலை கழுவும் போது கால் அல்லது அரை எலுமிச்சம் பழ சாற்றை அதனுடன் சேர்த்து கழுவினால் இறால் வாசனை குறைவாக இருக்கும்.

இறால் வறுவல்


தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
சோள மாவு - 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு



செய்முறை

1.
இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து, நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

2.
பிறகு மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் இறாலோடு சேர்த்து கலந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

3.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
நண்டு வறுவல்


தேவையான பொருட்கள்

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கோப்பை
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1.
நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும்.

2.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3.
பாதி சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4.
பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

5.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

6.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

7.
பிறகு இதனுடன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.

8.
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

9.
இதனுடன் கரம் மசாலா, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் நண்டை சேர்த்து லேசாக பிறட்டி, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்.

10.
பிறகு தேங்காயை நன்றாக அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

11.
நண்டு நன்றாக வெந்து குழம்பு நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும், மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்பு

1.
நண்டை ஓடு நீக்கி கழுவியதும் சிறிது நேரத்தில் சமைத்து விடவும். இல்லையென்றால் நண்டு உள்ளே குழைந்து விடும்.

2.
இஞ்சி பூண்டு விழுதில் இஞ்சி அதிகமாகவும், பூண்டு குறைவாகவும் சேர்த்து அரைக்கவும்.

3.
தேங்காய் விழுதுக்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.

4.
நண்டு சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகும்.
முட்டை குழம்பு


தேவையான பொருட்கள்

முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை

1.
மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.

2.
முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைக்கவும்.

3.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4.
பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

5.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

6.
அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.

7.
இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

8.
கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.

9.
பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

10.
பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

முட்டை பொரியல்


தேவையான பொருட்கள்

முட்டை - 4
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாயம் - 2
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை

1.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை துண்டாக வெட்டிக்கொள்ளவும்.

2.
முட்டையை உடைத்து ஒரு பத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும்.

3.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, ஊளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

4.
அடுத்து பச்சைமிளகாயையும், பெருங்காயத்தையும் போட்டு வதக்கவும்.

5.
இதில் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உப்பு போட்டு அடிப்பிடிக்காமல் மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.

6.
முட்டை உதிரி உதிரியாக ஆனதும் மிளகுத்தூளையும், நறுக்கிய கறிவேப்பிலையும் போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும்.

முழு க‌த்திரிக்காய் முட்டை தொக்கு

சிறிய முழு கத்திரிக்காய் - 4
வேக வைத்த முட்டை - 4
தக்காளி விழுது - 150 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்க்ரண்டி
கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க

எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகு - 7
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
வெங்காயம் பெரியது - 1 (நறுக்கியது)
கருவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
செய்முறை

1.
முட்டையை கழுவி ஒரு பத்திரத்தில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 7 லிருந்து பத்து நிமிடம் வேகவைத்து, பின்னர் முட்டையின் ஓட்டைப் பிரித்து, நான்கு பக்கமும் கத்தி கொண்டு லேசாக கீறி தனியே வைக்கவும்.

2.
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்த பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.

3.
முழு கத்திரிக்காயை கழுவி அதையும் கத்தி கொண்டு நாலாபக்கமும் லேசாக கீறி, வாணலியில் தாளித்தவற்றுடன் சேர்த்து வதக்கவும்.

4.
லேசாக வதஙகியதும் தக்காளி விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முடி போட்டு வேக விடவும்.

5.
கத்திரிக்காய் வெந்ததும் அவித்த முட்டையையும் அதனுடன் சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

6.
அதன் மீது கொத்து மல்லி தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு

1.
இது குஸ்கா, பிரியாணி, வெள்ளை சாதத்திற்கு தொட்டு கொள்ள நல்ல இருக்கும்.


கொத்து பரோட்டா


தேவையான பொருட்கள்

பரோட்டா - 6
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை

1.
வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

3.
பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4.
அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.

5.
பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6.
முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)

7.
பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

6.
கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

1 comment:

  1. அசைவ சமையல் வகைகள், அசைவ போரியல் வகைகள், அசைவ குழம்பு வகைகள், போன்ற பலவகையான அசைவ உணவு வகைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள். http://www.valaitamil.com/recipes_non-vegetarians

    ReplyDelete